பறவையின் பெரிய சிறகு, எழுத்தாணி
எழுதுகோல் கொண்டு எழுதினோம் பெண்ணை பற்றி.
சுண்ணாம்பு கட்டி ,பேனா பென்சில் கொண்டும்
பறை சாற்றினோம் பெண்ணை பற்றி .
தட்டச்சு வந்து , அச்சிடலும் ஆயிற்று .
பிரசுரம் ஆனது மேலும் பெண்ணை பற்றி.
கணினியின் காலம் கரைகளை கரைக்க
வலைபதிவுகளில் வர்ணித்தோம் பெண்ணை பற்றி.
ஆணுக்கு சரி பாதி என்றோம்
ஆணினும் உயர்ந்தவள் என்றோம்
ஆணை பெற்றவள் என்றோம்
ஆண் என்ன அளவு கோலா என்றோம்
பெண்ணுக்கு அழகு அடக்கம் என்றோம்
பெருங்கோபம் ஆகாதென்றோம் .
மண் நோக்கி நடத்தல் நன்றென்றோம்
மனை காத்து மக்கள் வளர்ப்பது போதும் என்றோம்
அடிமுடி காணா அருணாச்சலமாய் நீண்டது சர்ச்சை
மறுபடி வந்தது பெண்கள்தினம்
பொறிபட துவங்கின பட்டி மன்றம்
புல்லும் ஒன்றே புங்கை மரமும் ஒன்றே
என்றார் முனைவர் முத்தாய்ப்பாய்
யாரை பார்த்து புல் என்றாய் ?
என்று ஆங்காரப்பட்டனர் பெண்கள்
நீ புல் என்று நாங்கள் எங்கே சொன்னோம்
இந்த நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கிறது என்றன புங்கை மரங்கள்
அமைதி ! அமைதி ! என்ற புட்களின் தலைவி ,மேலும் ,
புல்லாய் நாமே நினைத்தது நம் தவறு
புல்லும் ஒன்றே புங்கையும் ஒன்றே இப்புவியில்
ஆதலினால் புல்லாய் இருந்தே புகழ் கொள்வோம்
அமோதித்தன சில அவமானப்பட்டன சில
புங்கையின் மகிமையை வளர்த்தன அவமானப்பட்ட புட்கள்
ஆமோதித்த புட்கள் வீசிய காற்றில் இன்புற்றன புங்கை மரங்கள்
வீணாய் புழுங்கி வெந்தன புட்கள் வெற்று வீம்பில் வளர்ந்தன புங்கை மரங்கள்
அடிமுடி காணா அருணாச்சலமாய் தொடர்ந்தது சர்ச்சை
அங்கம் அர்தனாரீச்வரம் என்பதெல்லாம் மறந்தது தான் மிச்சம் !

No comments:
Post a Comment