Monday, September 1, 2014

உறவுகள் தொடர்கதை


உறவுகள் தொடர்கதை ....




மூடு பனி விலகாத  மார்கழி காலை . அலாரம்  அடிப்பதற்குமுன் இது என்ன ஆட்டோ  சத்தம்   என்று யோசித்த படியே  எழுந்தார்  கணேசன் .

"லக்ஷ்மி , எங்க போய்ட்ட  , யாரோ நம்மாத்துக்கு  தான் வந்துருக்கா  பார் !"

அதற்குள்  லக்ஷ்மியும்  , " எங்க போவேன் , அம்பது  வருஷமா காலங்கார்த்தாலே  அதே காபி , அதே டிகாஷன்  வேலை தான் ..யார் வரா இவ்வளோ  சீக்கிரம் ?? என்று கேட்டபடியே  கணேசன்  உடன் வாசலுக்கு சென்றாள் .

"வா , வா, என்னடா  அருண் திடீர்ன்னு ? மாலதி வரலே ? "என்று  கேட்ட   லக்ஷ்மி ,  "நேத்திக்குதான் உங்கப்பா உன்னை பார்க்கணும்னு சொன்னார் ..இப்போ பார் வாய் எல்லாம் பல் ! " என்று  கணேசனை  பார்த்து சிரித்தாள் .

பிறந்த  வீட்டுக்குள்  நுழையும் போதே எங்கிருந்தோ வந்து கூடவே ஒட்டிக்கொள்ளும்  சோம்பலுடன்  சோபாவில்  அருண் ,"தொப் " என்று சாய்ந்தான் .

அதற்குள் கணேசன்  Ipad  உடன் வந்து  , "அருண் , இந்த ipad  லே key pad  காணாமே காணாமே  போறதுடா ..கொஞ்சம் சொல்லி குடேன் என்று கெஞ்சினார் .

"குழந்தை திடுதிப்புன்னு  வந்திருக்கானே , என்னன்னு  விசாரிக்காமே இந்த ipad பத்தி ஆரம்பிச்சாச்சா? " என்று பர்ஸ்ட் டோஸ்  காபியுடன்  வாங்கி கட்டிகொண்டார் கணேசன் - மனைவியிடமிருந்து .

இதையெல்லாம் ரசித்தபடியே அம்மா குடுத்த அற்புதமான காபியை சுவைத்தபடி சோம்பல் முறித்த அருண் , " ஆபிஸ்  விஷயமா வந்திருக்கேன் மா ..மாலதிக்கு  லீவ் போடா முடியலே , நாளைக்கே போகணும் திரும்பி " என்றான்.

'சரி , இரு உனக்கு பிடிச்ச பருப்பு  உசிலி , மோர்க் குழம்பு பண்றேன்" என லக்ஷ்மி சமையல் அறைக்கு சென்றாள் .

கணேசன் , கிடைத்த வாய்ப்பை  நழுவ விட  மனமில்லாமல்  ipad  சகிதம்  மகனிடம் வந்து உட்கார்ந்தார் ,  ஆனால் ..போன வேகத்தில் திரும்பிய லக்ஷ்மி " ஏண்டா , டாக்டர்  கிட்டே  போனேளா ? என்ன சொல்றார்? வயசு  ஏறிண் டே   போறதே ..." என்று  வாஞ்சையுடன்  மகனிடம்  மகப்பேற்றை  பற்றி பேசினாள் .

" ஏதாவது இருந்தா அவனே சொல்ல மாட்டானா , லக்ஷ்மி " என்று கணேசன் நாசூக்காக  சொல்லி பார்த்தார்... இன்னுமொரு டோஸ்  வருமென்று தெரிந்தும். !

" இல்லேம்மா, ivf  , அதான்  செயற்கையா  தான் முடியும் போல இருக்கு . எனக்கும் , மாலதிக்கும் அதுலே அவ்வளவா  இஷ்டம் இல்லை ..சைடு எபக்ட்ஸ் இருக்கும் போல இருக்கு...ஆனா ..மாலதி ஒரு குழந்தையை அடாப்ட் பண்ணிக்கலாம்னு சொல்றா ...எனக்குத் தான் என்னவோ  தயக்கமா இருக்கு "  அருண்  ஒத்திகை  பார்த்ததை கடகடவென  சொல்லி முடித்தான்.

பேரிரை ச்சலான ஒரு மௌனத்துக்கு  பின் லக்ஷ்மி  மெதுவாக  "ஏண்டா , நல்ல ஐடியா தானே ? " என்றாள் .

கணேசன் மெளனமாக  இருந்தார்.

" இல்லே, இரத்த சம்பந்தமே இல்லாம   எப்படி ...எனக்கு என் மேலேயே நம்பிக்கை  இல்லேமா " என்று எங்கேயோ பார்த்தபடி எப்படியோ சொல்லி முடித்தான்
அருண்.

கணேசன் , கனைத்தபடி .."அருண் , எனக்கும் உங்க அம்மாவுக்கும் என்ன இரத்த சம்பந்தம் ?  அம்பது  வருஷமா  சந்தோஷமா  இல்லையா ? உனக்கும்  மாலதிக்கும் என்ன இரத்த சம்பந்தம் ..கல்யாணத்துக்கு  முன்னாடி 3 வருஷம் , கல்யாணத்துக்கு அப்புறம் 7 வருஷம்  அன்யோன்யமா  இல்லையா ? தைரி யமா  இறங்கு . லேட் பண்ணாதே "  என்று எழுந்தார் .

லக்ஷ்மிக்கு  தன்  காதையே நம்ப முடியவில்லை , கணேசன் இவ்வளவு நேர்த்தியாய்  சொன்னதை கேட்டு ...

அருணுக்கு  எங்கேயோ பொறி தட்டினார் போல இருந்தது.. "வளர்த்த பாசத்துக்கு ஈடு இணை இல்லை "  என அம்மா சொல்வது கேட்டுக்கொண்டு இருக்கும் போதே கை, மாலதி செல் நம்பரை தட்டியது...

உணர்வுகள் சிறுகதை . உறவுகள் தான் தொடர்கதை .











4 comments:

Hema said...

Super Vijika...very nicely written. Short and sweet!!

RAJI MUTHUKRISHNAN said...

Very nice, Viji. Love the bit about the father running to the son with the iPad as soon as he comes - a kind of role reversal!
And the puns are sweet too.

Ripple-waves said...

Thankyou Hema for reading and leaving your comment.

Ripple-waves said...

Thankyou Raji for your encouraging comment as always !

Akshaya tritiya - Caveat Emptor!

 Akha Teej or Akshaya tritiya is an auspicious day for the Hindus and Jains. 'Kshaya' in Samaskritam means to erode/diminish. 'A...