உறவுகள் தொடர்கதை ....
மூடு பனி விலகாத மார்கழி காலை . அலாரம் அடிப்பதற்குமுன் இது என்ன ஆட்டோ சத்தம் என்று யோசித்த படியே எழுந்தார் கணேசன் .
"லக்ஷ்மி , எங்க போய்ட்ட , யாரோ நம்மாத்துக்கு தான் வந்துருக்கா பார் !"
அதற்குள் லக்ஷ்மியும் , " எங்க போவேன் , அம்பது வருஷமா காலங்கார்த்தாலே அதே காபி , அதே டிகாஷன் வேலை தான் ..யார் வரா இவ்வளோ சீக்கிரம் ?? என்று கேட்டபடியே கணேசன் உடன் வாசலுக்கு சென்றாள் .
"வா , வா, என்னடா அருண் திடீர்ன்னு ? மாலதி வரலே ? "என்று கேட்ட லக்ஷ்மி , "நேத்திக்குதான் உங்கப்பா உன்னை பார்க்கணும்னு சொன்னார் ..இப்போ பார் வாய் எல்லாம் பல் ! " என்று கணேசனை பார்த்து சிரித்தாள் .
பிறந்த வீட்டுக்குள் நுழையும் போதே எங்கிருந்தோ வந்து கூடவே ஒட்டிக்கொள்ளும் சோம்பலுடன் சோபாவில் அருண் ,"தொப் " என்று சாய்ந்தான் .
அதற்குள் கணேசன் Ipad உடன் வந்து , "அருண் , இந்த ipad லே key pad காணாமே காணாமே போறதுடா ..கொஞ்சம் சொல்லி குடேன் என்று கெஞ்சினார் .
"குழந்தை திடுதிப்புன்னு வந்திருக்கானே , என்னன்னு விசாரிக்காமே இந்த ipad பத்தி ஆரம்பிச்சாச்சா? " என்று பர்ஸ்ட் டோஸ் காபியுடன் வாங்கி கட்டிகொண்டார் கணேசன் - மனைவியிடமிருந்து .
இதையெல்லாம் ரசித்தபடியே அம்மா குடுத்த அற்புதமான காபியை சுவைத்தபடி சோம்பல் முறித்த அருண் , " ஆபிஸ் விஷயமா வந்திருக்கேன் மா ..மாலதிக்கு லீவ் போடா முடியலே , நாளைக்கே போகணும் திரும்பி " என்றான்.
'சரி , இரு உனக்கு பிடிச்ச பருப்பு உசிலி , மோர்க் குழம்பு பண்றேன்" என லக்ஷ்மி சமையல் அறைக்கு சென்றாள் .
கணேசன் , கிடைத்த வாய்ப்பை நழுவ விட மனமில்லாமல் ipad சகிதம் மகனிடம் வந்து உட்கார்ந்தார் , ஆனால் ..போன வேகத்தில் திரும்பிய லக்ஷ்மி " ஏண்டா , டாக்டர் கிட்டே போனேளா ? என்ன சொல்றார்? வயசு ஏறிண் டே போறதே ..." என்று வாஞ்சையுடன் மகனிடம் மகப்பேற்றை பற்றி பேசினாள் .
" ஏதாவது இருந்தா அவனே சொல்ல மாட்டானா , லக்ஷ்மி " என்று கணேசன் நாசூக்காக சொல்லி பார்த்தார்... இன்னுமொரு டோஸ் வருமென்று தெரிந்தும். !
" இல்லேம்மா, ivf , அதான் செயற்கையா தான் முடியும் போல இருக்கு . எனக்கும் , மாலதிக்கும் அதுலே அவ்வளவா இஷ்டம் இல்லை ..சைடு எபக்ட்ஸ் இருக்கும் போல இருக்கு...ஆனா ..மாலதி ஒரு குழந்தையை அடாப்ட் பண்ணிக்கலாம்னு சொல்றா ...எனக்குத் தான் என்னவோ தயக்கமா இருக்கு " அருண் ஒத்திகை பார்த்ததை கடகடவென சொல்லி முடித்தான்.
பேரிரை ச்சலான ஒரு மௌனத்துக்கு பின் லக்ஷ்மி மெதுவாக "ஏண்டா , நல்ல ஐடியா தானே ? " என்றாள் .
கணேசன் மெளனமாக இருந்தார்.
" இல்லே, இரத்த சம்பந்தமே இல்லாம எப்படி ...எனக்கு என் மேலேயே நம்பிக்கை இல்லேமா " என்று எங்கேயோ பார்த்தபடி எப்படியோ சொல்லி முடித்தான்
அருண்.
கணேசன் , கனைத்தபடி .."அருண் , எனக்கும் உங்க அம்மாவுக்கும் என்ன இரத்த சம்பந்தம் ? அம்பது வருஷமா சந்தோஷமா இல்லையா ? உனக்கும் மாலதிக்கும் என்ன இரத்த சம்பந்தம் ..கல்யாணத்துக்கு முன்னாடி 3 வருஷம் , கல்யாணத்துக்கு அப்புறம் 7 வருஷம் அன்யோன்யமா இல்லையா ? தைரி யமா இறங்கு . லேட் பண்ணாதே " என்று எழுந்தார் .
லக்ஷ்மிக்கு தன் காதையே நம்ப முடியவில்லை , கணேசன் இவ்வளவு நேர்த்தியாய் சொன்னதை கேட்டு ...
அருணுக்கு எங்கேயோ பொறி தட்டினார் போல இருந்தது.. "வளர்த்த பாசத்துக்கு ஈடு இணை இல்லை " என அம்மா சொல்வது கேட்டுக்கொண்டு இருக்கும் போதே கை, மாலதி செல் நம்பரை தட்டியது...
உணர்வுகள் சிறுகதை . உறவுகள் தான் தொடர்கதை .

4 comments:
Super Vijika...very nicely written. Short and sweet!!
Very nice, Viji. Love the bit about the father running to the son with the iPad as soon as he comes - a kind of role reversal!
And the puns are sweet too.
Thankyou Hema for reading and leaving your comment.
Thankyou Raji for your encouraging comment as always !
Post a Comment